பொதுவான விசாரிப்புகளோடு
மெதுவாய் துவங்கும்
நம் தொலைபேசி உரையாடல்கள்...
நத்தையின் வேகத்தைப் போல்,
வார்த்தைகள் நகர,
சிறுத்தையின் வேகத்தை போல்,
நிமிடங்கள் நகர,
அர்த்தங்களின்றி பேசிக்கொண்டு இருப்போம்.
உன் புன்னகையை ரசிக்க வேண்டும்
என்பதற்காக ஏதேதோ சொல்வேன் நான்.
புன்னகைப்பதே தெரியாமல் புன்னகைப்பாய்.
அது எப்படி உன்னால் மட்டும் முடிகிறது?
கல் நெஞ்சம்தான் உனக்கு....
எதையாவது சொல்லிவிடுவாய்..
என்னவென்று கேட்டால்
ஒன்றும் இல்லை என்பாய்.
திமிரின் மொத்தமும் நீதான்.
மொட்டை மாடியில் அமர்ந்து
உன்னுடன் பேசிக்கொண்டு இருக்கையில்
என்னுடன் வந்து அமர்ந்து கொள்கிறது நிலா.
நீ பேசுவதை ஒட்டுக்கேட்க...
உன் வார்த்தை கேட்கும் நேரங்களில்
மோட்சம் பெறுகின்றன என் செவிகள்.
என்ன பாவம் செய்தது என் இதழ்கள்?
தனிமையிலே இனிமை காண முடியுமா?
ஏன் முடியாது..
எனக்கு ஒரு செல்ஃபோன் கொடுத்து
செவ்வாய் கிரகத்தில் விட்டுவிட்டால் கூட
இனிமை காண்பேன்.
யார் SMS அனுப்பினாலும்
அது நீயாய் இருக்க கூடாதா
என்றே மனம் அடித்து கொள்கிறது.
நீ அழைக்கையில் மட்டும் ஒலிக்கும் பாடல்,
வந்திருப்பது கால் அல்ல,
காதல் என்று சொல்லிப் போகிறது
உனக்கான ரிங்டோன்,
உனக்கான SMS டோன்,
உன் அழைப்புக்கான புகைப்படம்
என ஒவ்வொன்றாக அலங்கரித்து வைத்திருப்பேன்.
ஆனால் உன்னிடமிருந்து
எதுவுமே வருவதில்லை.
கேட்டால் "காத்திருத்தல் சுகம்' என சொல்வாய்.
அதை "வலி" என்று எப்படி
உனக்கு புரிய வைப்பது?
பீட்ஸா'வுக்காக காத்திருப்பதில்
வேண்டுமானால் சுகம் இருக்கலாம்.
ஆனால் நான் உணவுக்காக காத்திருக்கிறேன்,
அதுவும் பலநாள் பட்டினியுடன்..
என்னுடன் பேசும் நேரங்களில்
இயர் ஃபோன் மாட்டி கொள்ளாதே.
உன் இதழ்களின் அருகாமையை
உணர முடியாமல்
தவிக்கிறது என் மனம்.
அதனால் தான் ஃ போனை
"அருகில் வைத்து பேசு,
அருகில் வைத்து பேசு" என்பேன்.
மற்றபடி ஒன்றுமே கேட்கவில்லை
என்று நான் சொல்வதெல்லாம் பொய்.
அது உனக்கும் தெரியும்..
ஒரு மணி நேரமாய் என்ன பேசினோம்?
அப்புறம்... என்ற வார்த்தையை மட்டும்
ஆயிரம் முறையாவது சொல்லி இருப்போம். ௦௦௦௦௦
நீயாக கொடுப்பாய் என நானும்,
நானாக கொடுப்பேன் என நீயும்,
"அப்புறம் அப்புறம்" என்று வார்த்தைகளை அப்புறப்படுத்தியபடியே பேசிக்கொண்டு இருப்போம்.
கொடுக்காத முத்தத்திற்காக நீயும்,
பெறாத முத்தத்திற்காக நானும்,
தயக்கமுலாம் பூசியபடியே
பேசிக்கொண்டு இருப்போம்.
கடைசிவரை இருவரது
இதழ் சிறைகளில் இருந்தும்
முத்தப்பறவை விடுதலை ஆவதே இல்லை.
ம்ம்ம்ம்ம்.... பார்க்கலாம்...
நமக்குள் நடக்கும் இந்த நாடகம்
எப்போது முடிவுக்கு வருகிறது என்று?
வேண்டாம்.. வேண்டாம்..
அது தொடரட்டுமே
இதுவும்
சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது
-::-மயூரன்-::-
கவிதையின் காதலன்